சாதிகள் இல்லையடி பாப்பா - வலையிலே சாதி, மத, மொழி சண்டைகள்
எனக்கு எப்போது சாதி என்ற ஒரு விஷயம் அறிமுகமானது? நான் 3-ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, பள்ளியில் எல்லாருடைய சாதியையும் கேட்டு பதிந்து கொண்டு இருந்தார்கள். என்னை எழுப்பி கேட்ட பொழுது
எனக்கு தெரியவில்லை. இந்து என்றேன். மதம் பற்றிய அறிவு எப்போது மூளையில் பதிந்தது அல்லது பதிக்கப்பட்டது என்பது என் ஞாபகத்தில் இல்லை. ஆக 3-ஆம் வகுப்பில் இருந்து சாதி என்கின்ற விஷயத்தை
பற்றிய விவரங்கள் என் மூளையில் கொஞ்சம் கொஞ்சமாக பதிக்கப்பட தொடங்கியது.
என்னுடைய வளர்ப்பை பற்றி சிந்தித்து பார்த்தால் நான் பிறந்த்தது முற்போக்கான குடும்பத்திலோ அல்லது பகுத்தறிவு குடும்பத்திலோ கிடையாது. என் தாத்தா தலை முறையில் இருந்தவர்களுக்கு சாதி பிடிப்பு
இருந்தது. அதற்கு அடுத்த தலை முறையில் கொஞ்சம் குறைந்தது, ஆனாலும் இருந்தது. அவர்கள் எப்போதும் அந்த பிடிப்பை வெளிப்படையாக பறை சாற்றி கொண்டது கிடையாது. சில குறிப்பிட்ட சாதிகளின்
மீதுள்ள வெறுப்பை சில பொழுதுகளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் வேளையில் வெளிப்படுத்துவது உண்டு. ஆனால் எங்கள் தலைமுறையின் மீது அந்த பற்று திணிக்கப்ப்டவில்லை.
அதனால் நான் சாதியின் மீது எந்த பிடிப்பும் இல்லாமல்தான் வளர்ந்தேன். இன்றும் இருக்கிறேன்.
பள்ளியில் படித்த பொழுது யாரும் என்னை சாதியின் பெயரால் விலக்கியதும் இல்லை. நானும் யாரையும் விலக்கியது இல்லை. இத்தனைக்கும் நான் 2 வருடங்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரால் நடத்தப் பட்ட
பள்ளியில் படித்தேன். அதனால் எந்த பாதிப்பும் என்னுள் இல்லை.
எப்போதுமே என்னுள் இருந்து வந்த நம்பிக்கை என்னவெனில், படிப்பும் வசதியும் வந்து விட்டால், சாதி, மதம், மொழி, இனம் இது போன்ற குறுகிய வட்டத்தில் சிந்திப்பது குறைந்து விடும் என்பதுதான்.
ஆனால் அது தவறு என்பது போல் அடுத்தடுத்த அனுபவங்கள் அமைந்த்தன.
இளங்கலை படித்த கல்லூரியிலும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் அதிகம் இருந்தனர். ஒரு சாதி பெருமையும் அடுத்தவன் தாழ்ந்தவன் என்கிற எண்ணமும் மிக மிக மெல்லிய இழையாக நிறைய பேர் மனதில்
அடியோடுவதை உணர முடிந்த்தது. ஆனால் யாரும் அதை பறை சாற்றி கொள்ளவில்லை. அது வரலாற்று காரணங்களல் இருக்கலாம் அல்லது இத்தனை படித்த நாம் சாதிப் பற்றை வெளிப்படையாக காண்பிப்பதா
என்ற வெட்கமாக இருக்கலாம்.
எனவே கல்லூரி முடிக்கும் வரை எனக்கு சாதி குறித்த எந்த அதிர்ச்சியான அனுபவமும் இல்லை.
முதுகலை படிக்க சென்ற இடத்தில்தான், சாதிப் பற்றை வெளிப்படையாக பறை சாற்றி கொள்பவர்களை பார்த்தேன். கிராமத்து சூழ்நிலையில் இருந்து படிக்க வந்தவர்கள் அதிகம் இருந்தது காரணமாக இருக்கலாம்.
நம்ம சாதிப் பொண்ணை அவன் எப்படி மடக்கப் பார்க்கலாம் போன்ற வார்த்தை பிரயோகங்கள் சாதாரணமாக எந்தவொரு வெட்கமும் குற்ற உணர்வும் இன்றி உபயோகிக்கப் பட்டன. கல்லூரி விடுதியில் இரு
சாதி குழுக்கள் சண்டையிட்டு கொண்டது எனக்கு ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சியின் உச்சம். இந்த சூழ்நிலை கொடுத்த சுதந்திரத்தின் காரணமாக நகர் புறத்திலே இருந்து நன்கு படித்த குடும்பத்தில் இருந்து வந்த
மக்களும் சாதிப் பெருமையை வெளிப் படையாகப் பேச முடிந்தது. அது சாதியின் மேன்மையைப் பற்றிய பிரசங்கமாக இருக்காது. அனேகமாக நாங்கள்லாம் ................. ளாக்கும். எங்களோட திறமை இது என்பது
போன்ற வார்த்தைகளோடு முடிந்த்து விடும். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் என்னுள் படிப்பு சாதியை ஒழிக்கும் என்ற எண்ணத்தை பொய்யாக்கியது.
படித்து முடித்து சென்னைக்கு வந்த இடத்தில் பெரிய ஊரில் இது போன்ற விஷயங்களுக்கு யாருக்கும் நேரம் இருக்காது என நினைத்தேன். என்னுடைய நிறுவனத்திலும், வெளிப்படையாக எதுவும் இல்லை எனினும்
கண்ணுக்கு தெரியாத ஒரு சூட்சும இழை ஒடுவதை உணர முடிந்த்தது. ஆனால் வேறு சில நண்பர்களின் அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது. வெளிப்படையான பெருமிதங்களிலும் வார்த்தை பிரயோகங்களிலும்
அதிர்ச்சி அடைந்த்தவர்கள் அதிகம்.
இதை விடப் பெரிய அதிர்ச்சி கொஞ்ச நாட்களுக்கு முன் சில வலைப் பூக்களை படிக்க நேர்கையில் கிடைத்தது. சாதி துவேஷங்களின் உச்ச கட்ட வெளிப்பாடும் சாதி சண்டையும் கிராமங்களில் இருந்து வலைக்கு
இடம் பெயர்ந்து விட்டதா என்ன. முகம் காட்டாமல் காயம் இல்லாமல் எதிராளியை தாக்க வசதி கிடைத்தவுடன் வெளிப்படையாக பேச வெட்க பட்ட மனத்தின் அழுக்கு வெளியில் வருகிறது.
சாதி வெறி என்றில்லை. மத வெறி, இன வெறி, மொழி வெறி எல்லாம் தலை விரித்து ஆடுகின்றன. சில வலைப் பதிவுகளில் சென்று பார்த்தால், வலைப் பதிவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சாதி சண்டைகளும், இன
துவேஷமும் நிறைந்த பின்னூட்டங்கள் காணக் கிடைக்கின்றன. தமிழ் வலை பதிவுகளில் சாதி சண்டை, மத சண்டை என்றால், ஆங்கில வலை பதிவுகளில், மொழி சண்டையும் மத சண்டையும்.
என் அனுபவத்தில் நிறைய மக்களிடையே சாதி பெருமை, மத பெருமை இன்ன பிற பெருமைகள் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்ட தயக்கம் இருந்தது. அந்த தயக்கமே அடுத்த தலைமுறையிடையே இது
போன்ற உணர்வுகள் குறைய காரணம். ஆனால், இன்று வலையிலே இது போன்ற பெருமைகளை வெளி காட்டுவதன் மூலம், இது போன்ற உணர்வுகளை, வேரோடு அறுத்தெறிவதற்கு தேவையான தலைமுறைகளின்
எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்பது என் கருத்து.

